Tuesday, January 28, 2014

சினிமா தயாரிப்பில் தீவிரம் காட்டும் சூர்யா..!



 சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் மூலம் தங்களுக்கு நல்ல காலம் பிறந்திருப்பதாக துணை இயக்குநர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.

'சிங்கம் 2' படத்தின் மூலம் படத்தயாரிப்பிலும் ஈடுபட தீர்மானித்தார் சூர்யா. தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு தனது குழந்தைகளின் பெயரான தியா, தேவ் ஆகியோரது முதல் எழுத்தை வைத்து 2D எண்டர்டெயின்மென்ட் என்று ஆரம்பித்தார்.

அப்படத்தினைத் தொடர்ந்து சூர்யா தயாரிக்கவிருக்கும் படங்கள் பற்றிய செய்தியோ, என்ன மாதிரியான கதைகளைக் கேட்கிறார் என்பது பற்றியோ தகவல்கள் வெளியாகவில்லை.

இதுதொடர்பாக சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்று வந்த இணை இயக்குநர் ஒருவரைச் சந்தித்த போது, பெயர் வெளியிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நம்மிடையே பேசினார். "சூர்யாவின் தயாரிப்பு அலுவலகத்திற்கு யார் சென்றாலும் உடனடியாக ஒரு படிவத்தினைக் கொடுத்து நிரப்பச் சொல்லுவார்கள். அப்படிவத்தில் பெயர் மற்றும் கைபேசி எண், படிப்பு, ஊடகத் துறைக்கு வரும் முன்பு செய்த வேலை, பொழுதுபோக்கு, ஊடகத் துறையில் அனுபவம், கதை வகை, கதைச்சுருக்கம், இக்கதையின் தனித் தன்மை என்ன? ஏன் இது படம் ஆக்கப்பட வேண்டும்? ஆகிய கேள்விகள் இருக்கும்.

அப்படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். இதே போல நிறைய பேர் கொடுத்திருக்கிறோம். படத்தின் பட்ஜெட் 2 கோடிக்கு மிகாமல் இருப்பது போல தான் கதைகளைக் கேட்கிறார்கள். எனது கதையும் அதற்குள் தான் திட்டமிட்டிருக்கிறேன். கண்டிப்பாக எனது கதை சூர்யாவிக்கு பிடிக்கும். எனக்கு கண்டிப்பாக வாய்ப்பிருக்கு" என்று சந்தோஷம் பொங்க பேசினார்.

ஆகவே, இயக்குநராக வேண்டும் என்று கதை எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் கதவு திறந்திருக்கிறது. விரைவில் சூர்யா தயாரிக்கும் படத்தின் இயக்குநர் நீங்களாகவும் இருக்கலாம்.

0 comments:

Post a Comment