Monday, January 27, 2014

அறுவகைச் சுவை என்ன என்ன..?





அறுவகைச் சுவை என்ன என்ன?

காரம்:

 உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.


கசப்பு:


உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.


இனிப்பு:

உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.


புளிப்பு:

இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.


துவர்ப்பு:

இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

 வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.


உப்பு:


 ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

 கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது

கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி..!



பார்த்திபன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம் விஜய் சேதுபதி.

வித்தகன் படத்தினை தொடர்ந்து ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ என்ற வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கியுள்ளார் இயக்குனர் பார்த்திபன்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப்படத்தில் பார்த்திபன் நடிக்கவில்லை. ஆனால் அவரது மகள் கீர்த்தனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதுதவிர விஜய்சேதுபதி ஒரு முக்கியமான கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

மேலும் சினிமா பற்றிய கதை என்பதால் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் சிம்பு- நயன்தாரா திருமணம்..!



பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா–சிம்பு திருமண காட்சி இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ராஜா ராணி படத்தில் கிறிஸ்தவ முறைப்படி ஆர்யாவும், நயன்தாராவும் திருமணம் செய்வது போல் காட்சி வைக்கப்பட்டது. அதை போஸ்டராக அச்சிட்டு வெளியிட்டும் படத்துக்கு விளம்பரம் தேடினர்.

அது போல் இந்த படத்தில் காட்சி வைக்கிறார்கள். சிம்புவும், நயன்தாராவும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்வது போல் இக்காட்சியை எடுக்கப் போகிறார்களாம். இந்து கோவில் ஒன்றில் இதை படமாக்க உள்ளனர். செட் போட்டு எடுக்கலாமா அல்லது நிஜ கோவிலிலேயே படமாக்கலாமா என்று பரிசீலனை நடக்கிறது.

சிம்புவும் நயன்தாராவும் ஏற்கனவே காதலித்து, கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தார்கள். அடுத்து நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டு திருமணம் வரை வந்தார்கள். கடைசியில் இதுவும் முறிந்து போனது.

தற்போது நயன்தாரா, சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கியுள்ளார். சிம்புவும் பிசியான நடிப்புக்கு மத்தியில் ஹன்சிகாவை காதலித்து வருகிறார்.

ஃபேஸ்புக் மார்க்கெட்டிங்... குறைந்த செலவு..! அதிக லாபம்..!



சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் பலரும் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை மார்க்கெட்டிங். தரமான பொருள் தயார், ஆனால், அதிக  வாடிக்கையாளர்களைச்  சென்றடைய முடியவில்லையே என்கிற கவலை பலருக்கு.

நாம் தயாரிக்கும் பொருள் அல்லது வழங்கும் சேவை பற்றி பலருக்கும் எளிதில் சென்று சேரும் ஓர் எளிய மார்க்கெட்டிங் கருவியாக மாறி இருக்கிறது ஃபேஸ்புக்.

இன்றைய உலகில் காலையில் எழுந்தவுடன் முகம் கழுவுகிறார்களோ இல்லையோ, கம்ப்யூட்டரில், லேப்டாப்பில், ஸ்மார்ட் போனில் முகநூலைத் (ஃபேஸ்புக்) திறந்து பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள் பலர். நண்பர்களின் வட்டத்தை அதிகப்படுத்த பலரும் பயன்படுத்திவந்த ஃபேஸ்புக், இப்போது மிகச் சிறந்த மார்க்கெட்டிங் மேடையாக மாறி இருக்கிறது. தாங்கள் செய்துவரும் தொழிலை ஃபேஸ்புக் மூலம் வெற்றிகரமாக மார்க்கெட்டிங் செய்து, விற்பனையை அதிகரித்து எக்கச்சக்கமாக லாபத்தையும் சம்பாதித்து வருகிறார்கள்.

நாம் செய்யும் தொழிலை ஃபேஸ்புக் மூலம் கொண்டு செல்லும்போது, கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன?, எப்படி முறையாக ஃபேஸ்புக் மார்க்கெட்டிங்கை மேற்கொள்வது? இதில் இருக்கும் சாதக, பாதகங்கள் என்னென்ன? என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். இது குறித்து பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் சமூக வலைதளங்களுக்கான பிரிவின் தலைவர் கே.எஸ்.ராஜசேகரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

மார்க்கெட்டிங் செய்ய புதிய களம்!


''இன்றைக்கு ஃபேஸ்புக் பக்கங்களில் பல பிசினஸ் புரொஃபைல்களை அடிக்கடி பார்க்க முடிகிறது. ஃபேஸ்புக் என்ற சமூக வலைதளத்தை மார்க்கெட்டிங் செய்ய புதிய களமாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.

பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், சொந்தமாகத் தொழில் செய்பவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் மூத்தக் குடிமக்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் ஃபேஸ்புக்கில் உலக அளவில் மொத்தம் சுமார் 1.2 பில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்கள். இந்திய அளவில் சுமார் 82 மில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். இவர்களை ஆதாரமாகக்கொண்டு, ஒருவர் செய்யும் தொழிலை இவர்கள் மத்தியில் பிரபலப்படுத்த முடியும். அதற்கென தனியாக பிசினஸ் பக்கங்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும். 

எப்படி உருவாக்குவது?

தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினர்களும் அவரவர்களின் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை மையமாக வைத்து பிசினஸ் பக்கங்களை ஃபேஸ்புக்கில் ஆரம்பிக்கலாம். இதற்கென எந்த விதிமுறைகளும் கிடையாது. கட்டணமும் கிடையாது.

 ஃபேஸ்புக்கில் ஒருவர் தனது புராடக்ட்களை மார்க்கெட்டிங் செய்வதற்காக களம் இறங்கும்போது, அதை மட்டுமே தொடர்ந்து செய்யாமல் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள் குறித்த விவரங்களையோ, அவர்களின் தொழில் சார்ந்த தகவல்களையோ பதிவு செய்யவேண்டும். பதிவு செய்யும் விவரங்கள் பயனாளர்களை ஈர்க்கும் விதமாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் தொழிலுக்கான வாடிக்கையாளர்களாக சீக்கிரமாகவே மாறிவிடுவார்கள்.

செய்யப்படும் பதிவுகள் சாதாரணமாக இல்லாமல் தொழில் குறித்த உண்மைத்தன்மையை நிரூபிக்கும் விதமாக இருக்கவேண்டும். அப்படி தெரியப்படுத்தும் தகவலானது புகைப்படங்களாகவோ, வார்த்தைகளாகவோ இருக்கலாம். வார்த்தைகள் என்கிறபோது ஐந்து வரிகளுக்குள் சுருக்கமாகச் சொல்வது நல்லது. புகைப்படங்களாக இருந்தால் அந்தப் புகைப்படம் நீங்கள் சொல்லும் தகவல் பயனாளர் களுக்கு சென்று சேரும்விதமாக இருக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் பயனாளர்கள் படிக்க வருவதில்லை; ஸ்கேன் செய்ய வருகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டால் மேலே சொன்ன இரண்டு விஷயங்களும் சாத்தியமாகும்.

கூகுளுடன் சாம்சங் ஒப்பந்தம்...!



இன்று இணையதளத்தின் ஜாம்பவான் கூகுளுக்கும் மொபைல் உலகின் ஜாம்பவான் சாம்சங்கிற்கும் ஒர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அது என்னவென்றால் அந்த இரண்டு கம்பெனிகளும் கூகுள் வசமுள்ள ஆண்ட்ராய்டை சாம்சங் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்தி கொள்ளும் ஒப்பந்தம் தான் அது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இன்னும் 10 ஆண்டுகள் கூகுளின் ஆண்ட்ராய்டு வசம் இருக்கும் அதற்கான பங்கினை இது கூகுளுக்கு வழங்க வேண்டும் என்பதாகும்.

மேலும் இந்த ஒப்பந்தத்தின் படி இந்த இரு கம்பெனிகளும் பின் வருங்காலத்தில் மோதிக் கொள்ளாது எனவும் தெரிகிறது.

எது எப்படியோ இனி சாம்சங்கும் கூகுளும் நண்பேண்டா...

மொராக்காவோவில் சண்டை போடவிருக்கிறார் ஜீவா..!



பிரபல ஒளிப்பதிவாளரான ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா மற்றும் துளசி இணைந்து நடித்துவரும் திரைப்படமான யான் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் சில பாடல் காட்சிகள் மொராக்காவோவில் படமாக்கப்படவுள்ளன.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகிவரும் இத்திரைப்படத்தினை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம்
தயாரித்துவருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையைத்துவருகிறார்.

பிரகாஷ்ராஜ், நாசர், பிரேம்ஜி அமரன், தம்பி ராமைய்யா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துவரும் இத்திரைப்படத்தின் பல காட்சிகள் சென்னை, மும்மை மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே படமாக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய சில சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் மொராக்கோவில் படமாக்கப்படும்.

இக்காட்சிகளைப் படமாக்க படக்குழு மொராக்கோ செல்லவிருக்கிறது. மொராக்காவோவில் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் விரைவில் திரைப்படம்
வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையோ உண்மை...!!!


1.காதலை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனா, அதை மெய்ன்ட்டெய்ன் பண்ண நெறயா செலவு செய்ய வேண்டியிருக்கும்...

2.சாப்பிடுகையில் கடைசியாய் ஒன்று என்றதும் இருப்பதில் பெரிய தோசையை தேடுபவள் -அம்மா.

3.இந்தியாவில் வரிசைகள் மிக நீளமாக இருப்பதற்கு தொப்பையும் ஒரு காரணம் ..

4.Facebook-ல நல்லவனா நடிப்பது வேஸ்ட். இங்க யாரும் உங்களுக்கு பொண்ணோ , கடனோ கொடுக்கப் போவதில்லை ...

5.சென்னை மாவட்ட எல்லை ஆரம்பம் என்ற எழுதியுள்ள தட்டிகளுக்கு பதிலாக போக்குவரத்து நெரிசல் ஆரம்பம் என எழுதி வைக்கலாம்...

6.காதல் தோல்வியை கொண்டாடவும் ஒருநாள் இருந்தால் மொத்த உலகமும் அதை கொண்டாடித் தீர்க்கும் நாளாக அது இருக்கும்....

7.தான் அழகாக இல்லை என்று நினைக்கும் ஒரு ஆணின் தாழ்வு மனப்பான்மையை நீக்குவது ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வையே

8.என் பட்டினியை தவிர, எந்த தவறையும், மன்னித்துவிடுகிறாள் என் தாய்.

9.கண்ணுக்கு தெரியாத கடவுளை வேண்டிக்கொண்டு, அம்மா விபூதி வைத்துவிடும் போது,
அருகிலேயே
தெரிகிறது கடவுள்...

10.எந்த பெண்ணும் நீ கட்டுன வேட்டி சட்டையோட வா உன்ன நான் காப்பாத்துறேன் என்று சொல்வதில்லை ..

நேற்று வெளியானது விஜய் ஆண்டனி நடிக்கும் சலீம் பாடல்கள்..!



இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான நான் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் உருமாறினார்.

நான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அவர் நடித்துவரும் திரைப்படம் சலீம். இயக்குனர் பாரதிராஜாவிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிவந்த என்.வி. நிர்மல்குமார் இப்படத்தை இயக்கிவருகிறார். ஸ்டுடியோ 9 புரொடக்சன்ஸ், ஸ்ரீ கிரீன் புரொடக்சன்ஸ் மற்றும் விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினைத் தயாரித்துவருகின்றன.

நான் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்ததைத் போலவே, இப்படத்திற்கும் விஜய் ஆண்டனியே இசையைமைத்துள்ளார். நேற்று அவரது இசையில் உருவாகிவரும் சலீம் படத்தின் இரு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சிவசம்போ எனத் துவங்கும் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பாடலாக வலம்வருகிறது. நேற்று வெளியான இரண்டு பாடல்களுமே படத்தின் இசை வெளியீட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளன.

பான் கார்டு விண்ணப்பிக்க புதிய நெறிமுறை : வருமானவரித்துறை



வரும் பிப்ரவரி 3ம் தேதி முதல் பான் கார்டு விண்ணப்பித்தலை நெறிமுறைபடுத்துகிறது வருமானவரித்துறை...

 இனி பான்கார்டு விணணப்பிக்க விரும்பும் நபர் தன்னுடைய

 1.அடையாள அட்டை

, 2.இருப்பிடச் சான்று,

3.பிறந்த தேதியை உறுதி செய்யும் ஆவணம்

ஆகியவற்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும்,பான் கார்டு விண்ணப்பிக்கும் மையங்களில் உங்கள் அசல் ஆவணங்களை விண்ணப்பிக்கும் போது நகலோடு இணைத்து சமர்பிக்க வேண்டும்.சரிபார்த்தலுக்கு பிறகு விண்ணப்பிக்கும் நபரிடம் அசல் ஆவணங்கள் ஒப்படைக்கப்படும் என வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

புதிதாக பான் கார்டு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு:

1.தனியார் அல்லது ஏஜென்ட் மூலம் பான் கார்டு விண்ணப்பிக்கும் போது அசல்  ஆவணங்கள் தொலைய வாய்ப்புள்ளதால் கூடிய வரையில் நீங்கள் நேரடியாக பான் கார்டு விண்னப்பிக்கும் மையங்களில் விண்ணப்பிப்பது நல்லது.

2.நீங்கள் விண்ணப்பிக்க அளிக்கும் அசல் ஆவணங்களை தவறுதலாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால் சற்று கவனமாக செயல்படுவது அவசியம்.

3.நீங்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் போது சேவை வரி ஏதுமின்றி விண்னப்பிக்கலாம்..

விக்ரம் என்னதான் பண்றார்..?



விக்ரம்... கமலுக்கு நிகராக வருவார் எனப் பேசப்பட்ட நடிகர்.

 இப்போதும் கமலைப் போன்ற திறமைசாலியாக இருந்தும், அடிக்கடி அவர் எடுத்துக் கொள்ளும் நீண்ட இடைவெளி காரணமாக ரசிகர்களிடம் மீண்டும் மீண்டும் தன்னை நினைவுபடுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அடுத்தடுத்து வேகமாக படம் பண்ண வேண்டும்... ரிலீஸ் பண்ண வேண்டும் அவர் நினைத்தாலும் அதெல்லாம் நடப்பதில்லை. விக்ரம் என்னதான் பண்றார்? இந்த நிலை அவருக்கு அந்நியனில்தான் ஏற்பட்டது. அந்தப் படம் வெளியாக இரண்டு முழு ஆண்டுகள் தேவைப்பட்டது.

அடுத்தடுத்து படங்கள் பண்ண அவர் முடிவு செய்த நேரத்தில் பீமாவில் மாட்டிக் கொண்டார். இல்லை.. இனி இப்படி நடக்காது என அறிவித்துவிட்டு, மீண்டும் அவர் சிக்கியது கந்தசாமியில். கன்னித்தீவு கதை மாதிரி இழுத்துக் கொண்டே போன அந்தப் படம் ஒருவழியாக ரிலீசானபோது, விக்ரமுக்கு வயது ஏறியதுதான் மிச்சம். படம் கெட்டபெயரைத்தான் சம்பாதித்துக் கொடுத்தது.

 தெய்வத் திருமகள், தாண்டவம் என அடுத்தடுத்து படம் பண்ணவர், மீண்டும் ஷங்கரின் பிரமாண்டத்தில் சிக்கியுள்ளார். 2012-லிருந்து விக்ரமுக்கு எந்தப் படமும் வெளியாகவில்லை. ஐ படம் ஏப்ரலில் வருமா... மேயில் வருமா என்று தெரியவில்லை.

பிப்ரவரி இறுதியில்தான் படப்பிடிப்பே முடியும் என்கிறார்கள். அடுத்து என்ன செய்யப்போகிறார்? மீண்டும் தரணியுடன் கைகோர்க்கிறார் விக்ரம்.

 ஷங்கர் படத்துக்காக உடம்பைக் குறைத்து நோஞ்சானாக மாறியவர், இப்போது தரணி படத்துக்காக இயல்பான நிலைக்குத் திரும்பப் போகிறார்.

மோகன்லாலுக்கு ஜோடியான சிம்ரன்..!



திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆனவர்களைக் கூட பாரபட்சம் காட்டாமல் ஹீரோயினாக்கி சந்தோஷப்பட்டுக் கொள்ளும் மலையாள சினிமா. அந்த வரிசையில் சிம்ரனும் சேர்ந்திருக்கிறார்.

தேவயானி திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு மோகன்லால் ஜோடியாக ‘பாலேட்டன்’ படத்தில் நடித்தார். அதேபோல் மீனாவுக்கும் ஒரு ஹீரோயின் ரோல் மலையாளத்தில் கிடைத்திருக்கிறது.

சிம்ரனை மட்டும் விட்டு வைப்பானேன். ஜீத்து ஜோசப்பின் புதிய படத்தில் மோகன்லால் ஜோடியாக சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

மலையாள சினிமாவின் நவீன இயக்குனர்களில் ஜீத்து ஜோசப்பும் ஒருவர். இவரின் ‘மெமரிஸ்’ படம் ஆகஸ்ட் 9-ம் தேதி ரம்ஜானுக்கு வெளியாகிறது.

போலீஸ் அதிகாரி ஒருவர் ஆல்கஹாலுக்கு அடிமையாவதுதான் படத்தின் கதை. பிருத்விராஜ் தான் ஹீரோ. 'மும்பை போலீஸ்' படத்தில் போலீஸாக நடித்த சூட்டோடு இதிலும் போலீஸாக நடித்திருக்கிறார்.

ரம்ஜானுக்கு வெளியாகும் நான்கு படங்களில் மெமரிஸுக்குதான் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறதாம் கேரளாவில்.

காமராசர் - வாழ்க்கை வரலாறு




காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநிலம் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

காமராசு எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு 1976 இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது. சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தொடக்ககால வாழ்க்கை

காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது.

தனது பள்ளிப் படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார்.

சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். - இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

சிறை வாழ்க்கையும் படிப்பும்

பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரசின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார்.

ராசாசியி தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசு கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராசுலு நாயுடு அவர்களின் வாத திறமையால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆனார்.

 1940-ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார்.

அரசியல் குரு

மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராசர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத்தான் தன் பணியைத் தொடங்கினார்.

தமிழக அரசியல்

தமிழக ஆட்சிப் பொறுப்பு

1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராசர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராச்சியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது)

குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரஸின் உள்ளேயே ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம. நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.

ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றதன் பின்னணி.
அமர்ந்திருப்பவர்கள் காரைக்குடி இராமநாதன், - சா. கணேசன், - இராஜாஜி - பாகனேரி பில்லப்பா, - காமராசர், - ரா. கிருஷ்ணசாமி நாயுடு

அமைச்சரவை

காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:

மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.

அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் தி.மு.க போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. தி.மு.க.வின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; தி.மு.க வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன் என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் இந்த இருவரும்.)

அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி. பரமேசுவரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை.

முதலமைச்சராக ஆற்றிய பணிகள்

ராசாசி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப் பட்டது.

காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.

அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:

  •     பாரத மிகு மின் நிறுவனம்
  •     நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
  •     மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய              பெயர் CPCL)
  •     இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
  •     நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
  •     கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
  •     மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.

அகிலஇந்திய காங்கிரசு தலைமை

மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு.

 இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை பதவி விலகல் செய்து (02.10.1963) பொறுப்பினை பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9-ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு.கே.பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.

அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரிடம் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964-ல் சவகர்லால் நேரு மரணமடைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாசுதிரி அவர்களை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாசுதிரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது.

இறுதிக் காலம்

காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபரிமித வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போக காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார்.

தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது.

அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

நினைவுச் சின்னங்கள்

தமிழ்நாடு அரசு காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் அவருக்கு பெருந்தலைவர் காமராசர் நினவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்கள்

2004-ஆம் ஆண்டு காமராசு என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

காமராசர் பற்றிய ஏனையவரது கருத்துக்கள்

    “தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராசு, காமராசு மகாபுருசர்.”-காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகர சரசுவதி

    "திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஓர் அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராசர் சென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என நான் நம்புகிறேன். -நேரு

    “சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?" -பெரியார்.

    “காமராசு தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.” -இந்திரா காந்தி

    "சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராசை நான் பிள்ளையாக பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்." -சிதம்பரம் சுப்ரமண்யம்

    "காமராசர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி"- ம. கோ. இராமச்சந்திரன்

    "தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்."- கருணாநிதி

    "காமராசர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், சுதந்திரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.

நகைச்சுவை!



 1) கணவன் : நான் செத்துட்டா நீ எங்கே இருப்பே?

மனைவி: நான் என் தங்கச்சி கூட இருப்பேன்... ஆமா நான் செத்துட்டா நீங்க எங்கே இருப்பீங்க?

கணவன்: நானும் உன் தங்கச்சி கூட இருப்பேன்...

மனைவி: ????

2) மனைவி: நம்ம பையன் ரொம்போ நச்சரிக்கிறான்... ஏதோ ஆப்பிள் போனாம்ல, ஒன்னு வாங்கி கொடுங்க.

கணவன் : “ஆப்பிள் போன விலை ரொம்ப அதிகம்”

மனைவி: “அப்ப ஒரு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுக்க்லாமுல....”

கணவன் :????

3) டீச்சர்: உன்பேருஎன்ன..? -

மாணவி : " சௌமியா"

டீச்சர்: உங்கவீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?

மாணவி : தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

டீச்சர் : ????

4) டாக்டர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

பேசன்ட் :"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

டாக்டர்: ????

5) மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

மாப்பிள்ளை வீட்டார்:???

6) ஆசிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்.

மாணவர் : சாரி சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்.

ஆசிரியர் : ?

7) ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?

மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!

ஆசிரியர் : ???

வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...

சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.

வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?

மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்.

வா‌த்‌‌தியா‌ர் : ????

உண்மையான பார்வை..!



உண்மையான பார்வை..!
ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், " ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?" என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி "அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை" என்று சொன்னார்.

சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து "ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?" என்று கேட்டார். அதற்கு அத்துறவியோ "ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டு சென்றான்" என்றார்.

மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவனும் துறவியிடம் "வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?" என்று பணிவுடன் கேட்டான். உடனே துறவி "மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்." என்று சொன்னார்.

அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் "துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொன்னீர்கள்" என்று கேட்டான். அதற்கு துறவி "இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்" என்று சொல்லி, "முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் பணிவும் தென்பட்டது" என்று பொறுமையாக விளக்கிக் கூறினார்.

தூதுவளை தோசை - சமையல்!




 தேவையானவை: 


புழுங்கலரிசி - 1 கப்,


தூதுவளை இலை - 15,


மிளகு - 10,


சீரகம் - அரை டீஸ்பூன்,


பச்சை மிளகாய் - 2,


உப்பு - தேவைக்கேற்ப,


எண்ணெய் + நெய் - தேவையான அளவு.


செய்முறை: 


புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து பின் மிக்ஸியிலோ, ஆட்டுக்கல்லிலோ பச்சை மிளகாய், மிளகு, சீரகம், தூதுவளை இலை, உப்பு சேர்த்து நன்றாக ஆட்டவும்.


பின்னர் தோசைக்கல்லில் இந்த மாவை மிக மெல்லிய ஊத்தப்பம் போல ஊற்றி நெய் + எண்ணெயைக் கலந்து அதை சுற்றிவர ஊற்றி, திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.


மார்பில் சளிக்கட்டியிருந்தால் அதை குணப்படுத்தும் தன்மை உள்ளது இந்த தோசை. ஆனால், சூடாக சாப்பிட்டால்தான் சுவை.

மரணத்திற்கு பின் நடப்பது என்ன..?




மரணத்திற்கு பின் நடப்பது என்ன..?: அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் சுவாரஸ்ய தகவல்

மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்? இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய புத்தகம் எழுதி உள்ளார்.

மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது நிகழ இருக்கும் செயல்கள் குறித்து பல மத நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் மரணம் எவ்வாறு இருக்கும் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அனுபவப்பூர்வமான தகவல்களோ குறிப்புகளோ எந்த நூல்களிலும் விரிவாக எழுதப்படவில்லை.

அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் கூறி இருப்பதாவது:-

சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணம் அடைந்து வரும் போது நான் ஒரு செவிலியர் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். நான் எனது பணியின் போது மரண நிலையில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சந்தித்தேன். டாம் கென்னார்ட் எனும் 60 வயது புற்று நோயாளி அறுவை சிகிச்சை முடித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் படுக்கையில் இருந்து எழுந்து நாற்காலியில் அமரும் அளவிற்கு குணம் பெற்று இருந்தார்.

இந்த நிலையில் திடீரென அவர் நினைவிழந்து விழுந்தார். அவரது உடல் குளிர்ந்தது. எனது எந்த ஒரு கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. நான் அவரது கைவிரல் நகங்களில் பேனா முனையினால் குத்தி வலி உணர்வை ஏற்படுத்திய போதிலும் அவரது உடல் சிறிதும் அசையவில்லை. வெகுவேகமாக அவரது தோல் ஈரம் ஆனது, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்து இரத்த அழுத்தம் சரிந்தது. அவரது நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்ததற்கு தெளிவான அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன. நான் உடனடியாக அவருக்கு கூடுதல் ஆக்சிஜன் கொடுத்தபின், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மற்ற செவிலியர்கள் உதவியுடன் அவரது படுக்கையில் அவரை கிடத்தினோம்.

மருத்துவருக்கு தகவல் கொடுத்த பின்பு மருத்துவரும் மேலும் ஒரு மருத்துவ நிபுணரும் அங்கு வரும் வரையிலும் டாம் முற்றிலும் நினைவு இழந்த நிலையில் தான் இருந்தார். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டாமிற்கு நினைவு திரும்பவில்லை.

பின்னர் நினைவு திரும்பிய டாம் நினைவிழந்து கிடந்த அந்த மூன்று மணி நேரத்தில் அவருக்கு நேர்ந்ததாக கூறிய அனுபவங்களை கேட்ட போது நான் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன். அவர் மூன்று மணி நேரத்திற்குள் வேறு ஒரு உலகிற்கு பயணம் சென்று வந்ததாக தெரிவித்தார். முதலில் படுக்கையில் இருந்து மிதந்து எழுந்து அறையின் உச்சிக்கு சென்றதாகவும் அங்கிருந்து தனது உடல் படுக்கையின் மேல் கிடந்ததைக் கண்டதாகவும் அது ஒரு அழகான, அமைதியான, வலியில்லாத அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார். அடுத்த நொடியே மருத்துவமனையின் அறையில் இருந்து மறைந்து இளஞ்சிவப்பு நிற அறை ஒன்றில் நுழைந்ததாக அவர் தெரிவித்தார்.

அங்கு ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களையும் கொண்ட ஒருவரை கண்டதாகவும் அவர் அருகில் அவரது தந்தை நின்றிருந்ததாகவும் தெரிவித்தார். டாம் தனது உணர்வுகளால் தனது தந்தையுடன் பேசியதாகவும் அதன் பின் ஏதோ ஒன்று அவரை தொட்டதை உணர்ந்ததாகவும் கூறினார். அடுத்த கணமே மருத்துவமனை அறையின் உச்சிக்கு திரும்பியதாகவும் அங்கிருந்து என்னையும் மருத்துவரையும் கண்டதாகவும் கூறினார்.

அப்போது நான் லாலிபாப் வடிவிலான ஒரு கருவியைக் கொண்டு அவரது வாய் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்ததாக பின்னர் அவர் தெரிவித்தார். மேலும் அறையின் திரைச்சீலை அருகில் ஒரு பெண்ணை அவர் கண்டதாகவும் அப்பெண் அவரது நாடித்துடிப்பை சோதனை செய்து கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

டாம் நினைவிழுந்து படுக்கையில் இருந்த அந்த தருணங்களில் நடந்ததாக கூறிய அனைத்தும் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அச்சமயத்தில் நான் ஈரமான அவரது வாய் பகுதியை துடைத்துக்கொண்டு இருந்தேன். திரைசீலையின் அருகில் மருத்துவ நிபுணரும் பிசியோதெரபி மருத்துவரும் நின்றிருந்தனர். இவை அனைத்தும் நடந்தேரிய அந்த நேரத்தில் ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களுடனும் கூடிய அந்த ஒருவர் அவரை திரும்ப போக சொன்னதாகவும் அதன் பின் அவர் மிதந்து வந்து அவரது உடலுக்கு திரும்பியதாகவும் டாம் கூறினார்.

மேற்கண்ட இந்த அனுபவங்கள் உட்பட மேலும் பலரது மரண அனுபவங்களை செவிலியர் தனது புத்தகத்தில் விவரித்துள்ளார்.

மீண்டும் சூப்பர் ஹீரோக்கள்..!




அதேதான். எதன் காரணமாக ஹாலிவுட் திரைப்படங்கள் பிரபஞ்சம் எங்கும் தன் நெட் ஒர்க்கை விரிவுபடுத்தியதோ, எதை மையமாக வைத்து கல்லாவை நிரப்பியதோ..!

அந்த காலம் மீண்டும் திரும்பியிருக்கிறது. யெஸ், சூப்பர் ஹீரோக்கள்தான் இந்த ஆண்டும் ஹாலிவுட் வசூலை பால் வெளியைத் தாண்டி உயர்த்தி இருக்கிறார்கள்.

வரலாறு திரும்பி இருக்கிறது. ஆனால், லேசான மாறுதலுடன். முந்தைய சூப்பர் ஹீரோ படம் போல் இன்று ஹீரோயிச படங்கள் எடுக்கப் படுவதில்லை. கதைகளிலும், காட்சிகளிலும், ஆக்ஷனிலும் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சூப்பர் ஹீரோவுக்கும் மனது உண்டு. அவனும் குற்ற உணர்ச்சியால் தவிப்பான். இயலாமையால் தத்தளிப்பான். அவ்வளவு ஏன் வில்லனிடம் தோற்கவும் செய்வான்... என்ற எதார்த்தத்தை அடிநாதமாக சூப்பர் ஹீரோ சப்ஜெக்டுக்குள் நுழைத்து இருக்கிறார்கள்.

வெற்றிப் பெற்ற அயர்ன் மேன் 3, தோர்: த டார்க் வோல்ட், மேன் ஆஃப் ஸ்டீல் ஆகியப் படங்கள் இதைத்தான் உணர்த்துகின்றன. வேறு வழியில்லை. இதற்கு மேல் யாரைத்தான் சூப்பர் ஹீரோக்கள் எதிர்ப்பார்கள்? கம்யூனிச நாடுகள் இன்று அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் இல்லை. ஓசாமா பின்லேடன் மறைந்த இடத்தில் புல் முளைத்துவிட்டது. சதாம் ஹுசேன் ஈராக் மக்களின் நினைவுகளில் கூட இல்லை. ஊதிப் பெருக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொற்றொடரும் பல்லிளித்துவிட்டது. அனைத்துக்கும் மேல் அமெரிக்க பொருளாதாரம் அதளபாதாளத்துக்கு வீழ்ந்துவிட்டது. இந்நிலையில் நரம்பு புடைக்க, முஷ்டியை மடக்கி யாரை நோக்கி கர்ஜிப்பது?

பெட்டிப் பாம்பாக அடங்கி விஞ்ஞானிகளையும், நிதிமூலதன நிறுவனங்களையும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். தவிர, இப்போது ஹாலிவுட்டில் எடுக்கப்படும் படங்களும் வெறும் அமெரிக்காவை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படுவதில்லை. ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா, ஐரோப்பா... என பிராந்திய மார்க்கெட்டை மனதில் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஸோ, கதையின் தன்மைகளும், காட்சிகளின் உருவாக்கவும் அதற்கு ஏற்பவே அமைக்கப்படுகின்றன. இந்த உண்மைகளைத்தான் இந்த ஆண்டு வெளியான  வெற்றிப் பெற்ற  மண்ணைக் கவ்விய அனைத்து ஹாலிவுட் படங்களும் வெளிச்சமிட்டு காட்டி இருக்கின்றன. இந்த மாற்றம் நல்லதா கெட்டதா என்பதை
இப்போது சொல்ல முடியாது. காலம்தான் அதை தீர்மானிக்க வேண்டும். ஆனால், மெல்ல மெல்ல மாற்றம் நிகழ்ந்து வருவது மட்டும் நிஜம்.

அதே போல் பல நாவல்கள் இந்த ஆண்டும் திரை வடிவம் கண்டிருக்கின்றன. ஆனால், இரண்டே இரண்டு மட்டும்தான் பட்டையை கிளப்பி இருக்கின்றன. அவை, த ஹங்கர் கேம்ஸ்: கேட்சிங் ஃபயர். ஹங்கர் கேம்ஸ் டிரையாலஜி நாவல்களின் இரண்டாம் பாகம் இது. முந்தைய முதல் பார்ட் போலவே இந்த இரண்டாவதும் சக்கைப்போடு போட்டிருக்கிறது. போலவே வோல்ட் வார் இசட் நாவலும் அதே பெயரில் வெளியாகி கல்லாவை டாலர்களால் நிரப்பியிருக்கின்றன.

இந்த இரு நாவல்களுமே பசி, பஞ்சம் அதற்காக நடக்கும் வன்முறை போராட்டம், செல்வந்தர்களின் வக்கிரம்... ஆகியவற்றை அடிப்படையாக கொண்டவை. கிட்டத்தட்ட இன்றைய உலக மக்கள் எதிர்கொள்ளும் இருத்தலியல் சிக்கல் இவைகள்தான். எனவே அந்த உணர்வுகளுக்கு இந்த இரு படங்களும் தீனி போட்டன.

போலவே முந்தைய வருடங்கள் போல் இந்த வருடமும் அனிமேஷன் படங்கள் கோதாவில் இறங்கி அனைவரையும் மிரட்டியிருக்கின்றன. டிஸ்பிகபுள் மீ 2, மான்ஸ்ட்ரஸ் யூனிவர்சிட்டி, த க்ரூட்ஸ் ஆகிய மூன்று படங்களும் பம்பர் ஹிட் ஆகியிருப்பது நல்ல விஷயம். பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கும், குழந்தைகளுக்குள் இருக்கும் குதூகலத்துக்கும் தீனி தேவை. அதை இந்த மூன்றுப் படங்களும் பூர்த்தி செய்திருக்கின்றன.

பல ஆக்ஷன் படங்கள் ரிலீசாகி இருந்தாலும் ஒன்றே ஒன்றுதான் சக்சஸ். அது, ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 6. ஆனால், முழுக்க முழுக்க வெர்சுவல் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட கிராவிட்டி அனைவரையும் நடுங்க வைக்கும் அளவுக்கு வசூலில் மிரட்டியிருக்கிறது. ஒருவகையில் இது ஆரோக்கியமான விஷயம். ஏனெனில் இனி வரும் காலங்களில் பலப் படங்கள் வெர்சுவல் ஸ்டூடியோக்களில்தான் தயாராகப் போகின்றன. அதற்கான அஸ்திவாரத்தை இந்தப் படம் போட்டிருக்கிறது.

மண்ணைக் கவ்விய படங்களுக்கும் குறைச்சலில்லை. குறிப்பாக மெகா பட்ஜெட்டில் தயாராகி, ஆர்ப்பாட்டத்துடன் வெளியான த ஃபிஃப்த் எஸ்டேட், புல்லட் டூ த ஹெட், பார்க்கர், ப்ரோக்கன் சிட்டி, பேட்டில் ஆஃப் த இயர், கெட்டவே, ஆர்.ஐ.பி.டி., த பிக் வெட்டிங், த லோன்
ரேன்ஜர், ஜாக் த ஜெயின்ட் ஸ்லேயர் ஆகியவை இந்தப் பட்டியலில் இணைந்திருக்கும் வைரங்களாக கருதப்பட்ட கண்ணாடி துகள்கள்.

ஆண்டு இறுதியில் வெளிவரவிருக்கும் ஹாபிட் இரண்டாம் பாகம், ஃப்ரோசன் உள்ளிட்ட படங்கள் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மொத்தத்தில் கதைத் தன்மையில் கொஞ்சூண்டு எதார்த்தத்துக்கு ஹாலிவுட் மாறி இருக்கிறது. இதுதான் 2013 ஹாலிவுட்டின் நிலைமை.

உலகின் மிகச்சிறிய ஆண்ட்ராய்டு டேப்லெட்..! - சோனி அறிமுகம்!





சோனி நிறுவனம் 7 இன்ச் விட சிறிய திரை கொண்டுள்ள உலகின் முதல் டேப்லெட் அறிமுகப்படுத்தியுள்ளது. சோனி எக்ஸ்பெரிய இசட் அல்ட்ரா என்று அழைக்கப்படும் இந்த புதிய டேப்லெட் இந்த வாரம் ஜப்பான் மட்டும் தொடங்கி 52,000 யுவான் விலையில் கிடைக்கும்.

மாடல் முக்கிய அம்சங்கள் ஸ்டைலஸ் ஆதரவுடன் 6.4 இன்ச் டிஸ்ப்ளே, குவாட் கோர் 2.2GHz ஸ்னாப்ட்ராகன் 800 சிப்செட், 6.5mm திக் ப்ரோஃபைல், வாட்டர்ப்ரூஃப் மற்றும் கீறல் எதிர்ப்பு க்ளாஸ் பாடி மற்றும் ஆண்ட்ராய்டு 4.2 (ஜெல்லி பீன்) ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.

எக்ஸ் பெரிய இசட் அல்ட்ரா டேப்லெட்டின் மற்ற குறிப்புகள் 16GB ஆண்போர்டு சேமிப்பு, 2GB ரேம், 64GB வரை microSD அட்டை ஆதரவு, NFC, microUSB 2.0, ப்ளூடூத் 4.0 மற்றும் 3,050 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை அடங்கும். சோனியின் புதிய டேப்லெட்ல் 8MP கேமரா தக்க வைத்து கொண்டுள்ளது, இந்த மாடலில் இருந்து எல்இடி ப்ளாஷ் நீக்கப்பட்டது.

பெருமளவில் உற்பத்தி செய்யும் 7 இன்ச் திரை அளவு கீழ் உருவாக்கியுள்ளது இதுவே முதல் முறையாகும். பெரும்பாலான உற்பத்தியாளர்கள் டேப்லெட்டில் 7 மற்றும் 8 இன்ச் திரை அளவுகள் தேர்ந்தெடுக்கின்றனர். நிறுவனம் சமீபத்தில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்க்கான உலகின் முதல் யுஎஸ்பி டிரைவ்களை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.