விக்ரம்... கமலுக்கு நிகராக வருவார் எனப் பேசப்பட்ட நடிகர்.
இப்போதும் கமலைப் போன்ற திறமைசாலியாக இருந்தும், அடிக்கடி அவர் எடுத்துக் கொள்ளும் நீண்ட இடைவெளி காரணமாக ரசிகர்களிடம் மீண்டும் மீண்டும் தன்னை நினைவுபடுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அடுத்தடுத்து வேகமாக படம் பண்ண வேண்டும்... ரிலீஸ் பண்ண வேண்டும் அவர் நினைத்தாலும் அதெல்லாம் நடப்பதில்லை. விக்ரம் என்னதான் பண்றார்? இந்த நிலை அவருக்கு அந்நியனில்தான் ஏற்பட்டது. அந்தப் படம் வெளியாக இரண்டு முழு ஆண்டுகள் தேவைப்பட்டது.
அடுத்தடுத்து படங்கள் பண்ண அவர் முடிவு செய்த நேரத்தில் பீமாவில் மாட்டிக் கொண்டார். இல்லை.. இனி இப்படி நடக்காது என அறிவித்துவிட்டு, மீண்டும் அவர் சிக்கியது கந்தசாமியில். கன்னித்தீவு கதை மாதிரி இழுத்துக் கொண்டே போன அந்தப் படம் ஒருவழியாக ரிலீசானபோது, விக்ரமுக்கு வயது ஏறியதுதான் மிச்சம். படம் கெட்டபெயரைத்தான் சம்பாதித்துக் கொடுத்தது.
தெய்வத் திருமகள், தாண்டவம் என அடுத்தடுத்து படம் பண்ணவர், மீண்டும் ஷங்கரின் பிரமாண்டத்தில் சிக்கியுள்ளார். 2012-லிருந்து விக்ரமுக்கு எந்தப் படமும் வெளியாகவில்லை. ஐ படம் ஏப்ரலில் வருமா... மேயில் வருமா என்று தெரியவில்லை.
பிப்ரவரி இறுதியில்தான் படப்பிடிப்பே முடியும் என்கிறார்கள். அடுத்து என்ன செய்யப்போகிறார்? மீண்டும் தரணியுடன் கைகோர்க்கிறார் விக்ரம்.
ஷங்கர் படத்துக்காக உடம்பைக் குறைத்து நோஞ்சானாக மாறியவர், இப்போது தரணி படத்துக்காக இயல்பான நிலைக்குத் திரும்பப் போகிறார்.







0 comments:
Post a Comment